இலங்கையில் கடுமையான வறட்சி மற்றும் உரப் பற்றாக்குறை காரணமாக பச்சை தேயிலைக் கொழுந்து உற்பத்தி சுமார் 50 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக தேயிலை தூள் உற்பத்தியும் கணிசமாகக் குறைந்துள்ளதால், நாட்டின் அந்நியச் செலாவணி வருவாயில் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேசிய தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரும் சிரேஷ்ட தேயிலை ஆலோசகருமான சமன் கீகனகே தெரிவிக்கையில், மாதாந்தம் தேயிலை ஏற்றுமதி மூலம் சுமார் 110 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் கிடைத்து வந்த நிலையில், தற்போதைய கொழுந்து பற்றாக்குறையால் சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான ஏற்றுமதி வருவாய் இழக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சாதாரணமாக ஒரு பருவத்தில் ஒரு தேயிலை மரத்தில் இருந்து சுமார் 3 கிலோகிராம் பச்சைத் தேயிலைக் கொழுந்து அறுவடை செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த அளவு பாதியாகக் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்து பெறப்பட்டு வந்த சுமார் 400 கிலோகிராம் பச்சைத் தேயிலைக் கொழுந்து அறுவடை, தற்போது 200 கிலோகிராம் வரை குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேயிலை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள இந்த கடுமையான சரிவு, நாட்டின் முக்கிய ஏற்றுமதி துறைகளில் ஒன்றான தேயிலைத் தொழிலுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளதுடன், அந்நியச் செலாவணி வருவாயிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என தொழில்துறை வட்டாரங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக