புத்தளம் – மாரவில பகுதியில் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 35 வயதுடைய திருமணமான நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
7ஆம் வகுப்பில் கல்வி பயிலும் குறித்த சிறுமியின் தந்தையுடன் சந்தேகநபர் நெருங்கிய நட்பைப் பேணி வந்ததுடன், அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கும் சென்று வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி சிறுமியுடன் பழகிய சந்தேகநபர், அவரை காதல் வலையில் சிக்கவைத்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த ஜூலை 5ஆம் திகதி கடற்கரைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி சிறுமியை அழைத்துச் சென்ற சந்தேகநபர், மஹாவெவ பகுதியில் உள்ள விடுதிக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மேலும் இரண்டு சந்தர்ப்பங்களிலும் அதே விடுதிக்கு அழைத்துச் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 அவசர இலக்கத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாரவில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினரால் சிறுமியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் மூலம் சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மாரவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக