ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் முக்கிய தலைவராகக் கருதப்படும் கஞ்சிபானி இம்ரான் (KPI), மலேசியாவில் தங்கியிருந்த தனது இருப்பிடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மலேசியாவில் கைது செய்யப்பட்ட ரத்மலானையைச் சேர்ந்த சைமா வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சைமா, கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து போதைப்பொருள் வலையமைப்பில் முக்கிய பங்காற்றியதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
கஞ்சிபானி இம்ரானை கைது செய்வதற்காக இலங்கை பொலிஸாரின் விசேட குழுவொன்று அண்மையில் மலேசியாவிற்கு பயணித்திருந்தது. அங்கு மலேசிய பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது, ரத்மலானை சைமா கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயல்பட்டு வரும் இலங்கை பொலிஸ் குழு, மலேசிய அதிகாரிகளுடன் இணைந்து கஞ்சிபானி இம்ரானை கைது செய்யும் நோக்கில் தொடர்ச்சியான விசாரணைகளையும் தேடுதல் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விசாரணைகளின் போது, ரத்மலானை சைமா, குடு அஞ்சு உள்ளிட்டோருடன் இணைந்து போதைப்பொருள் வலையமைப்பை நடத்தி வந்ததுடன், பின்னர் கஞ்சிபானி இம்ரானின் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளிலும் தொடர்புபட்டிருந்ததாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக