பொதுமக்களை துன்புறுத்தும் வகையில் அல்லது ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பாக கிடைக்கும் முறைப்பாடுகள் அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, குற்றம் உறுதியானால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான உதய குமார வூட்லர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வதுபிட்டிவல பகுதியில் உள்ள கடையொன்றின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை அகற்றுமாறு கூறியபோது, அதன் சாரதியிடம் ஒழுங்கற்ற முறையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய குறித்த உப பொலிஸ் பரிசோதகர், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரிடம் தரக்குறைவாக பேசியதுடன், "வேண்டுமானால் எனது சீருடையை நீயே போட்டுக்கொள்" என்று கூறும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், குறித்த உப பொலிஸ் பரிசோதகரின் சேவை உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்களுடன் மரியாதையற்ற வகையில் நடந்துகொள்ளும் எந்தவொரு பொலிஸ் அதிகாரிக்கும் எதிராகவும் சட்டத்திற்கும் துறை ஒழுக்க விதிமுறைகளுக்கும் அமைவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக