இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 9ஆம் தர மாணவி ஒருவருக்கு தகாத செயற்பாடு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குருவிட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களில் இரு மாணவர்களை 28 நாட்கள் சிறுவர் நல்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். மீதமுள்ள மூன்று மாணவர்கள் பெற்றோரின் பொறுப்பில் ஒப்படைக்கப்படவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், குருவிட்ட பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து சம்பந்தப்பட்ட மாணவர்களை கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசாரணைகளின்படி, கைது செய்யப்பட்ட மாணவர்களில் இருவர் மாணவிக்கு நேரடியாக தகாத செயற்பாட்டில் ஈடுபட்டதாகவும், ஏனைய மூவர் அதற்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருவிட்ட பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக