பாட்டாளி மக்கள் கட்சியை தமிழ்நாட்டைத் தாண்டி ஆந்திரப் பிரதேசத்திலும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மாமல்லப்புரத்தில் நடைபெற்ற பாமகவின் பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய அவர், கட்சியின் எதிர்கால அரசியல் இலக்குகள் மற்றும் விரிவாக்கத் திட்டங்கள் குறித்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
பாமகவில் நிரந்தர தலைவர் என்ற பதவி இல்லை என்றும், கட்சி ஜனநாயக அடிப்படையில் செயல்படுகிறது என்றும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். தன்னை இனிமேல் “நிரந்தர தலைவர்” என்று அழைக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், ராமதாஸ் வாழும் காலத்திலேயே பாமக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றும், 2031ஆம் ஆண்டில் பாமக ஆட்சி அமைக்கும் வகையில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஆந்திரப் பிரதேசத்தில் இன்னும் சில மாதங்களில் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படும் என்றும் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இதற்கான பணிகள் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ஆந்திராவைச் சேர்ந்த முக்கிய நபர்கள் பனையூரில் நடைபெறவுள்ள சந்திப்பில் பங்கேற்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாமக தனது அரசியல் செயல்பாடுகளை தமிழ்நாட்டிற்கு வெளியேயும் விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கியிருப்பது தெரியவருகிறது.
அன்புமணி ராமதாஸின் இந்த அறிவிப்பு, பாமகவின் எதிர்கால அரசியல் திட்டங்கள் மற்றும் ஆந்திராவில் கட்சியின் விரிவாக்கம் தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக