ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேசிறி, தனக்கு விதிக்கப்பட்ட ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு எதிராக பதுளை மேல்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
தனது மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் தாம் குற்றமற்றவர் என அறிவித்து விடுதலை செய்யுமாறு மனுவில் கோரியுள்ள அவர், மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை தன்னை பிணையில் விடுவிக்குமாறும் நீதிமன்றத்திடம் விண்ணப்பித்துள்ளார்.
சட்டவிரோதமாக வீதியை மறித்தல், பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரைத் தாக்கி காயப்படுத்தல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சமிந்த விஜேசிறிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை பதுளை மேல்நீதிமன்றம் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
இந்த வழக்கு, 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பண்டாரவளை நகரில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயணித்த ஜீப் வாகனத்தை சட்டவிரோதமாக மறித்து, அதிகாரிகளை தாக்கி, திட்டி மற்றும் மிரட்டல் விடுத்ததாக சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டது.
இந்நிலையில், பதுளை மேல்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர் சமிந்த விஜேசிறி சார்பில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக