முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிரிழந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணையில், அவரது தனிப்பட்ட மெய்ப்பாதுகாவலராக 16 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஆர்.எம். பிரசன்ன கடுவலை நீதவான் நீதிமன்றில் முக்கிய சாட்சியங்களை வழங்கியுள்ளார்.
மேற்கு தெற்கு விசேட விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது சாட்சியமளித்த அவர், சம்பவம் நடைபெற்ற நாளில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தனது துப்பாக்கியை பரிசோதிக்க வேண்டும் எனக் கூறி முதலில் ஆயுதத்தை மட்டும் பெற்றுக்கொண்டதாகவும், பின்னர் தோட்டாக்கள் அடங்கிய மெகசினையும் வழங்குமாறு கேட்டதாகவும் தெரிவித்தார்.
அதன்பின்னர், உடற்பயிற்சிக்குச் செல்ல வேண்டும் எனக் கூறி தண்ணீர் போத்தல் ஒன்றை எடுத்து வருமாறு தன்னிடம் அறிவுறுத்தியதாகவும், தண்ணீர் எடுக்கச் சென்ற சில நொடிகளில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதால் உடனடியாக திரும்பி வந்தபோது, சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கிக் காயத்துடன் கீழே விழுந்து கிடந்ததாகவும் அவர் நீதிமன்றில் சாட்சியமளித்தார். பின்னர் அவரை உடனடியாக முல்லேரியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் உயிரிழந்ததாகத் தெரியவந்ததாக கூறினார்.
மேலும், கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய காலத்தில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தன்னிடம் துப்பாக்கியை கேட்டதில்லை என்றும், வழக்கமாக உடற்பயிற்சிக்குச் செல்லும்போது தண்ணீர் போத்தலை எடுத்துவருமாறு கூறுவதும் வழக்கமல்ல என்றும் சாட்சியத்தில் குறிப்பிட்டார். சம்பவம் நடந்த நாளில் அவர் உடற்பயிற்சி ஆடையில் இருந்தபோதிலும், வழக்கத்திற்கு மாறாக காலணி அணிந்திருக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
சாட்சியமளிக்கும் போது பொலிஸ் சார்ஜன்ட் பலமுறை உணர்ச்சிவசப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மேலதிக விசாரணைகளுக்காக முன்னாள் பொலிஸ் மா அதிபரின் சாரதி மற்றும் சமையல்காரரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச உத்தரவிட்டார்.
அத்துடன், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கி, தோட்டாக்கள் அடங்கிய மெகசின் மற்றும் வெற்றுத்தோட்டா உறை ஆகியவற்றை அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பி அறிக்கை பெறுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக