வத்தளை பள்ளியாவத்தையில் நடைபெற்ற குழந்தையின் பிறந்தநாள் விழாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூலை 23ஆம் தேதி இரவு, மட்டக்குளி பாலத்திற்கு அருகிலுள்ள மண்டபத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவின் போது, அங்கு கலந்துகொண்டிருந்த ஒருவரை குறிவைத்து ஆயுததாரி ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தார். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பின்னர் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் தொடர்புடையதாகக் கூறப்படும் ‘மட்டக்குளிய குடு ரொஷன்’ என்பவரை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ரொஷனின் சகோதரரின் குழந்தையின் பிறந்தநாள் விழாவின் போது, தலையை மூடியபடி வந்த நபர் ஒருவர் மண்டபத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணையின் தொடர்ச்சியாக, துப்பாக்கிச்சூட்டில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வாடகைக் காருக்கான கட்டணத்தை தனது வங்கி கணக்கின் மூலம் செலுத்தி உதவியதாக சந்தேகிக்கப்படும் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் சீதுவ, முக்கலங்கமுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளையும் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக