ஹொரணை ஆதார வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் பிரபல பாடகர் ஒருவரை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, குறித்த பாடகர் தனது தந்தை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரைப் பார்ப்பதற்காக வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாகவும், வைத்தியசாலை ஊழியர்களிடம் ஒழுங்கீனமாகவும் தகாத முறையிலும் நடந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, அவரை வைத்தியசாலை வளாகத்திலிருந்து வெளியேற்ற பாதுகாப்பு ஊழியர்கள் முயற்சித்தபோது அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. அந்தச் சூழலைக் கட்டுப்படுத்த முயன்ற வைத்தியசாலை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் மீது குறித்த நபர் தாக்குதல் நடத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், சம்பவத்திற்கு முன்னர் சந்தேகநபர் வைத்தியர்களுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்திற்குப் பின்னர் தப்பிச் சென்றுள்ள சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸார் விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சம்பவத்தின் முழுமையான பின்னணியையும் ஆராய்ந்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக