இரண்டாம் உலகப் போரின் பின்னர் போர், அடக்குமுறை மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான தஞ்சம் வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட 1951ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபை அகதிகள் ஒப்பந்தம் தனது 75ஆவது ஆண்டு நிறைவை எட்டியுள்ளது.
உலகம் முழுவதும் தஞ்சம் கோருவோரின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் முக்கிய சர்வதேச சட்ட ஆவணமாகக் கருதப்படும் இந்த ஒப்பந்தம், பல தசாப்தங்களாக கோடிக்கணக்கான மக்களின் உயிர்களையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது.
தற்போது உலகளவில் 4.1 கோடிக்கும் அதிகமான மக்கள் போர், வன்முறை மற்றும் அடக்குமுறைகளால் கட்டாய இடம்பெயர்வுக்கு உள்ளாகி அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இதேவேளை, பல நாடுகளின் கடுமையான குடியேற்றக் கொள்கைகள் மற்றும் சமீபத்திய அரசியல் மாற்றங்கள் காரணமாக அகதிகள் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச ஒப்பந்தங்களின் நடைமுறை அமலாக்கம் புதிய சவால்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு நிறைவை முன்னிட்டு, பல்வேறு நாடுகளில் தஞ்சம் பெற்று வாழும் அகதிகள் தங்களது வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். நிக்கரகுவாவின் அரசியல் அடக்குமுறையிலிருந்து தப்பிய மனித உரிமை வழக்கறிஞர் ஹுவான் கார்லோஸ் ஆர்சே, ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் ஸ்பெயினில் பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
சூடானில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிய வென்யென் கேப்ரியல், பின்னர் அமெரிக்காவில் குடியேறி தொழில்முறை கூடைப்பந்து வீரராக உயர்ந்ததுடன், ஐ.நா. அகதிகள் உயர் ஆணையரகத்தின் தூதுவராகவும் பணியாற்றி வருகிறார். அதேபோல், இரண்டாம் உலகப் போரின்போது நாஜி ஆட்சியிலிருந்து தப்பிய ஹெர்ஷல் க்ரீன்பிளாட் உள்ளிட்ட பலரும் அகதிகளுக்கான சர்வதேச பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.
மியான்மரில் இடம்பெற்ற வன்முறைகளிலிருந்து தப்பிய ரோஹிங்கியா அகதிகள், பாலஸ்தீன அகதிகள் மற்றும் சிரியப் போரிலிருந்து உயிர் தப்பியவர்களின் அனுபவங்களும் இந்த நிகழ்வில் எடுத்துக்காட்டப்பட்டன. பாதுகாப்பற்ற சூழலில் வாழும் மக்களுக்கு 'நாடுகடத்தாமை' கொள்கை தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.
உலகளவில் 130-க்கும் மேற்பட்ட ஆயுத மோதல்கள் தொடரும் தற்போதைய சூழலில், அகதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் சர்வதேச சட்டங்களையும் மனிதாபிமான ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக மனித உரிமை அமைப்புகளும் சர்வதேச நிபுணர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக