வவுனியா பூந்தோட்டம் பகுதியில் நேற்று (27.07.2026) காலை வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த மர்மநபர் ஒருவர், அங்கிருந்த முதியவரைத் தாக்கிப் பணம் பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று காலை முதியவரின் மனைவி வெளியூர் சென்றுள்ள நிலையில், இதனைச் சாதகமாகப் பயன்படுத்திய நபர் துவிச்சக்கர வண்டியில் வருகை தந்து கத்தியைக் காட்டி முதியவரை மிரட்டியுள்ளார்.
வீட்டிற்குள் புகுந்த அந்த மர்மநபர், முதியவரை அச்சுறுத்தி ஒரு இலட்சம் ரூபாய் பணத்தைத் தருமாறு கோரியுள்ளார். அதற்கு முதியவர் மறுப்புத் தெரிவித்து பணத்தைக் கொடுக்காத நிலையில், ஆத்திரமடைந்த அவர் முதியவர் மீது கொடூரத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து வவுனியா பொலிஸாருக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தப்பிச் சென்ற மர்மநபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக