கொழும்பு இராணுவத் தலைமையகம் அமைந்திருந்த காணியை ஷாங்க்ரிலா ஹோட்டலுக்கு விற்பனை செய்ததில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் சுமார் 100 கோடி ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். ஆணைக்குழுவின் அழைப்பிற்கு அமைய அங்கு சென்ற அவரிடம் அதிகாரிகள் சுமார் 3 மணித்தியாலங்கள் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவுசெய்துள்ளனர்.
"இலஞ்சம் ஊழல் மற்றும் வீண்விரையத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி" அமைப்பினால் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராகவே இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த நபர் ஒருவர் அளித்த சத்தியக்கடதாசியின் அடிப்படையில், TPL Itma மற்றும் Heliat ஆகிய வெளிநாட்டு ஆலோசனை நிறுவனங்கள் ஊடாகப் பெறப்பட்ட இந்தப் பணம், தங்கல்ல பகுதியில் ஹோட்டல் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கும் CSN ஊடக வலைப்பின்னலுக்கும் பயன்படுத்தப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சஜின் வாஸ் குணவர்தன அளித்த வாக்குமூலத்தின் மேலதிக விவரங்கள் எதுவும் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக