பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முன்னிட்டு, தெவிநுவரில் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க விஷ்ணு பெரஹெராவில் இருந்து காவடி நடன நிகழ்வை தற்காலிகமாக நீக்குமாறு பொலிஸ் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
தெவிநுவரில் அமைந்துள்ள உத்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் 769ஆவது வருடாந்திர எசல மகா பெரஹெரா விரைவில் நடைபெறவுள்ள நிலையில், விழாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜூலை 25ஆம் திகதியிட்ட உத்தியோகபூர்வ கடிதத்தின் மூலம், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்த பரிந்துரையை வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து, மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன, தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே ஆரச்சிகே திலின மதுசங்கவிடம் பெரஹெராவில் இடம்பெறும் காவடி நடன அம்சத்தை தற்காலிகமாக நீக்குவதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் தேசிய புலனாய்வுப் பிரிவு, அரச புலனாய்வு சேவை, பொலிஸ் விசேட பணியகம் மற்றும் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகள் வழங்கிய புலனாய்வு மதிப்பீட்டு அறிக்கைகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பையும் பெரஹெரா நிகழ்வின் சீரான முன்னெடுப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில், காவடி நடன நிகழ்வு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக