பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அநாகரீகமான முறையில் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வத்துபிட்டிவலை முதலீட்டு வலய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த குறித்த உப பொலிஸ் பரிசோதகர், பொதுமக்களுடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பரவலாக பகிரப்பட்டது. இந்தச் சம்பவம் கடந்த 23ஆம் திகதி காலை சுமார் 10.45 மணியளவில் வத்துபிட்டிவலை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள தனியார் நிறுவனமொன்றின் முன்பாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகளில், சீருடையில் கடமையிலிருந்த குறித்த அதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தருக்குப் பொருத்தமற்ற வகையில் பொதுமக்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு, மிரட்டும் தொனியில் பேசியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நடத்தை இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயருக்கும், அரச சேவையின் கண்ணியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகக் கருதப்பட்டதால், தாபன விதிக் கோவையின் கீழ் அவர் உடனடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பில் உள்ள அதிகாரிகள், ஒழுங்கீனமான அல்லது பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கும் வகையிலான நடத்தைகளில் ஈடுபடுவது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும், இத்தகைய செயல்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என்றும் இலங்கை பொலிஸ் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக