பதுளை மாவட்டத்தின் மகியங்கனை – பதியதலாவ பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 24ஆம் திகதி முற்பகல் 10.00 மணியளவில் தம்பான 54ஆம் மைல்கல் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றதாக மகியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, மோட்டார் சைக்கிளை செலுத்தியவருக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்கம்பத்தில் மோதியுள்ளது.
இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளை செலுத்திய 31 வயதுடைய திருமணமான ஒருவரும், பின்னால் பயணித்த அவரது மனைவியின் 23 வயதுடைய சகோதரரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவரின் மனைவி ஒலுவில் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என்பதுடன், பல்கலைக்கழகத்தில் 25ஆம் திகதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகவே இருவரும் பயணித்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரு உயிரிழப்புகள் தொடர்பான மரண விசாரணைகள் மகியங்கனை நகர திடீர் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் மகியங்கனை ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மகியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக