பதுளை மாவட்டத்தின் உனுகல்ல தோட்ட முகாமையாளரை உடனடியாக பதவியிலிருந்து நீக்கக் கோரி, அத்தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மல்வத்தவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான உனுகல்ல தோட்டத்தின் உனுகல்ல பிரிவைச் சேர்ந்த தொழிலாளியின் மகனான கோகுலநாத் மனோஜ்காந்த், தனது வீட்டுக்கு அருகில் கோழிக்கூண்டு அமைப்பதற்கான அனுமதி கோரி கடந்த ஏப்ரல் மாதம் தோட்ட முகாமையாளரிடம் விண்ணப்பித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மூன்று மாதங்கள் கடந்தும் அதற்கு பதில் கிடைக்காத நிலையில், கடந்த ஜூன் 17 ஆம் தேதி இது தொடர்பாக முகாமையாளரிடம் விளக்கம் கோரச் சென்றபோது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது, தோட்ட முகாமையாளர் தன்னை தாக்கியதாக மனோஜ்காந்த் ஹாலிஎல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த அவர் அதே நாளில் ஹாலிஎல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தோட்ட முகாமையாளரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, உனுகல்ல தோட்டத்தின் நான்கு பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த ஜூலை 18 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், தோட்ட நிர்வாக அலுவலக அதிகாரிகள் தொழிலாளர்களுக்கு உரிய சேவைகளை வழங்குவதில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 20 ஆம் தேதி தோட்டத்தின் உயர்மட்ட முகாமையாளரான சமிந்த பெரேரா சம்பவ இடத்திற்குச் சென்று தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தொழிற்சங்கங்களின் கோரிக்கைக்கு அமைவாக நிலவும் பிரச்சினை தொடர்பில் பதுளை மாவட்ட உதவி தொழில் ஆணையாளர் அலுவலகத்தில், உதவி தொழில் ஆணையாளர் தலைமையில் விசேட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக