பொது இடங்களில் குப்பைகளை வீசி சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவர்கள் மற்றும் டெங்கு பரவலுக்கு வழிவகுக்கும் வகையில் செயற்படுவோரை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில், 4ஜி கமரா தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் புதிய கண்காணிப்பு திட்டத்தை கெஸ்பேவ நகராட்சி மன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது.
நாட்டிலுள்ள ஒரு உள்ளாட்சி அமைப்பினால் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், முக்கிய இடங்களில் 4ஜி கமராக்கள் பொருத்தப்பட்டு, அவற்றில் பதிவாகும் காட்சிகள் நகராட்சி மன்றத்தின் தலைமை அலுவலகத்தில் உள்ள கணினி மையத்திலிருந்து நேரடியாக கண்காணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கெஸ்பேவ நகராட்சி மன்றம், இலங்கை பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகள் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த போதிலும், சிலர் தொடர்ந்து விதிமீறி செயற்பட்டு வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் காரணமாக, சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கும், டெங்கு நோய் பரவலைத் தடுப்பதற்கும், விதிமீறுபவர்களை ஆதாரங்களுடன் அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இந்த புதிய கண்காணிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கெஸ்பேவ நகராட்சி மன்றம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக