மட்டக்களப்பு: மோட்டார் சைக்கிளை வாங்குவதாகக் கூறி, அதனை ஓட்டிப் பார்த்து வருவதாக எடுத்துச் சென்று பின்னர் மற்றொரு மோட்டார் சைக்கிளை நூதனமான முறையில் திருடிச் சென்றதாகக் கூறப்படும் 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை குறிவைத்து, உரிமையாளர்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர், காத்தான்குடி பகுதியில் மோட்டார் சைக்கிள்களை வாங்கி விற்பனை செய்யும் கடைக்கு சென்ற சந்தேகநபர், அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
அதனை வாங்குவதற்கு முன்னர் மோட்டார் சைக்கிளை ஓட்டிப் பார்க்க வேண்டும் எனக் கூறியதைத் தொடர்ந்து, கடை உரிமையாளர் நம்பிக்கையின் அடிப்படையில் மோட்டார் சைக்கிளை அவரிடம் வழங்கியுள்ளார்.
ஆனால், மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்ற சந்தேகநபர் மீண்டும் கடைக்கு திரும்பாமல் அதனைத் திருடிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்பின்னர், திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை மட்டக்களப்பு–திருகோணமலை வீதியில் உள்ள போக்குவரத்து சமிக்ஞை விளக்கிற்கு அருகில் நிறுத்திய சந்தேகநபர், இணையத்தளத்தில் மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு இருப்பதாக விளம்பரப்படுத்திய ஒருவரை தொடர்புகொண்டுள்ளார்.
கொக்கட்டிச்சோலை பகுதியைச் சேர்ந்த அந்த நபரிடம், தான் மோட்டார் சைக்கிளை வாங்க விரும்புவதாகவும், உடனடியாக குறித்த இடத்திற்கு வருமாறும் தெரிவித்துள்ளார்.
அந்த நபர் மோட்டார் சைக்கிளுடன் சம்பவ இடத்திற்கு வந்தபோது, தனது மோட்டார் சைக்கிளை ஓட்டிப் பார்க்க வேண்டும் என சந்தேகநபர் கூறியுள்ளார்.
இதனை நம்பி அந்த நபர் தனது மோட்டார் சைக்கிளை அவரிடம் வழங்கிய நிலையில், சந்தேகநபர் ஏற்கனவே திருடிய மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு, அந்த நபரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் கடந்த 2023ஆம் ஆண்டிலும் இதேபோன்ற முறையில் ஒரு மோட்டார் சைக்கிளை திருடி விற்பனை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனால், குறித்த நபர் தனிப்பட்ட முறையில் மோட்டார் சைக்கிள்களை திருடியதுடன், அவற்றை விற்பனை செய்து பணம் சம்பாதிக்கும் நோக்கில் நீண்டகாலமாக திட்டமிட்டு செயல்பட்டாரா என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரிடமிருந்து திருடப்பட்டதாகக் கூறப்படும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், குறித்த நபர் கடந்த காலத்தில் 8 குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் வாங்கும் அல்லது விற்கும் போது, அடையாள ஆவணங்கள், பணப் பரிமாற்றம் மற்றும் வாகன உரிமை தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்தாமல், தெரியாத நபர்களிடம் வாகனங்களை ஒப்படைப்பது ஆபத்தானது என இந்தச் சம்பவம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக