கதிர்காமம் புனித பாதயாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுக்கான அன்னதான உணவுப் பொருட்கள், மட்டக்களப்பு மாநகர சபையின் குப்பை அகற்றும் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார், மட்டக்களப்பு பாலைமீன்மடுவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில், பொதுவாக குப்பை மற்றும் திண்மக் கழிவுகளை அகற்ற பயன்படுத்தப்படும் வாகனத்தில் அன்னதானத்திற்கான உணவுப் பொருட்கள் மற்றும் சமையல் உபகரணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
இந்த நடவடிக்கை, புனித பாதயாத்திரையில் ஈடுபடும் இந்து பக்தர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலானது என்றும், சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தும் அதிகாரிகளே இவ்வாறான செயல்பாட்டில் ஈடுபட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்தார்.
இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் இடம்பெறாத வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இதனுடன், மட்டக்களப்பு மாநகர சபையின் தற்போதைய நிர்வாகம் குறித்தும் அவர் விமர்சனங்களை முன்வைத்தார். தமிழரசுக் கட்சியின் நிர்வாகத்தின் கீழ் ஓராண்டுக்கும் மேலாகியும் நகரின் காந்தி பூங்கா, கந்தையா பூங்கா உள்ளிட்ட பல பொதுப் பகுதிகளில் குப்பைகள் முறையாக அகற்றப்படவில்லை என்றும், வடிகால்கள் மற்றும் வீதிகளில் கழிவுகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் மாநகர சபை தனது சுகாதார மற்றும் கழிவு முகாமைத்துவப் பொறுப்புகளை திறம்பட நிறைவேற்ற வேண்டும் என்றும், அவ்வாறு செயல்பட முடியாத நிலை இருந்தால் பொறுப்பிலிருந்து விலகி திறமையான நிர்வாகத்திற்கு வழிவிட வேண்டும் என்றும் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக