திருகோணமலை மாவட்டத்தின் மொரவெவ பகுதியில், சட்டவிரோதமான முறையில் ஆமைகளை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் தெரிவிக்கையில், ஹொரவ்பொத்தானை பகுதியில் இருந்து மஹதிவுல்வெவ நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று நேற்று (16) மாலை ரொட்டவெவ சோதனைச் சாவடியில் சோதனைக்காக நிறுத்தப்பட்டது. மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, முச்சக்கர வண்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று ஆமைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் 40 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்கள் திருகோணமலை மாவட்டத்தின் மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட முச்சக்கர வண்டி மற்றும் ஆமைகளையும் திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான மேலதிக சட்ட நடவடிக்கைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக