உணவு சாப்பிட்ட பிறகு பலரும் அறியாமலே செய்யும் சில பழக்கங்கள் செரிமானத்தை பாதிப்பதோடு, உடல்நலத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடும். சாப்பிட்ட உடனே தவிர்க்க வேண்டிய செயல்கள் குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சாப்பிட்ட உடனே குளிர்ந்த தண்ணீர், எலுமிச்சை ஜூஸ், ஜிகர்தண்டா அல்லது ஐஸ்கிரீம் போன்றவற்றை உட்கொள்வது செரிமான செயல்முறையை பாதிக்கக்கூடும். இதனால் அஜீரணம், வயிற்று உப்புசம் மற்றும் செரிமானக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
உணவு சாப்பிட்டவுடன் படுத்து தூங்குவது வயிற்றில் உள்ள அமிலம் உணவுக்குழாயில் மேலேற வழிவகுக்கும். இதன் காரணமாக நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை மற்றும் செரிமான சிக்கல்கள் உருவாகலாம். எனவே, உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகே உறங்குவது சிறந்தது.
சாப்பிட்ட உடனே குளிப்பதால் உடலின் இரத்த ஓட்டம் தோல் மற்றும் கை, கால் பகுதிகளுக்கு அதிகமாக செல்லும். இதனால் செரிமான உறுப்புகளுக்குத் தேவையான இரத்த ஓட்டம் குறைந்து, வயிற்று வலி, அஜீரணம் மற்றும் வாந்தி உணர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
உணவுக்குப் பிறகு உடனடியாக ஜிம் பயிற்சி, ஓட்டம் அல்லது கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்வது செரிமானத்தை பாதிக்கக்கூடும். அதற்கு பதிலாக 10 முதல் 15 நிமிடங்கள் மெதுவாக நடப்பது செரிமானத்திற்கு உதவியாக இருக்கும்.
சாப்பிட்ட உடனே டீ அல்லது காபி குடிப்பது சில சத்துகள் உடலில் உறிஞ்சப்படுவதை குறைக்கலாம். அதேபோல் மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் செரிமான அமைப்பை பாதிப்பதோடு, குடல் தொடர்பான நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும்.
உணவு முடிந்த சிறிது நேரத்திற்குப் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரை அளவாக பருகுவது செரிமானத்திற்கு உதவியாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உணவு சாப்பிட்ட பிறகு குளிர்பானங்கள் அருந்துதல், உடனே தூங்குதல், குளித்தல், கடுமையான உடற்பயிற்சி செய்தல், டீ, காபி, மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களை தவிர்ப்பது செரிமான ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். அதற்கு பதிலாக சிறிது நேரம் அமைதியாக இருந்து மெதுவாக நடப்பது உடலுக்கு நல்ல பலன்களை அளிக்கும்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக