ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்த மாதத்தின் நடுப்பகுதியில் பிரான்ஸ் நாட்டிற்கு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த உத்தியோகபூர்வ பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பயணம் ஜூலை 15 முதல் 18ஆம் திகதி வரை நடைபெறவிருந்ததாகவும், இதனை இலங்கையில் உள்ள பிரான்ஸ் தூதரகமும் இலங்கை அரசாங்கமும் முன்னதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாக, பிரெஞ்சு முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதும், இருநாடுகளுக்கிடையிலான பொருளாதார மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவதும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்காக பிரான்ஸ் அரசின் பிரதிநிதிகள் மற்றும் அந்நாட்டு வணிக நிறுவனங்களுடன் சந்திப்புகளும் திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
எனினும், பயணத்தின் போது விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய சில சர்வதேச முக்கியஸ்தர்களை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. அதன் பின்னர், அந்தச் சந்திப்பு தொடர்பான தகவல்கள் வெளிப்படையாகியுள்ள சூழ்நிலையில், அரசாங்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு நடவடிக்கையும் தற்போதைய நிலையில் முன்னெடுக்கப்படக்கூடாது என்ற கருத்து முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பின்னணியில், ஜனாதிபதியின் பிரான்ஸ் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனுடன் தொடர்புடைய அனைத்து உத்தியோகபூர்வ சந்திப்புகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்தப் பயணம் ஏன் ரத்து செய்யப்பட்டது என்பது தொடர்பாக ஜனாதிபதி அலுவலகம் அல்லது இலங்கை அரசாங்கம் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கமொன்றை வெளியிடவில்லை.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக