தேனீர் கடையைக் கூட நடத்தத் தகுதியற்றவர் என விமர்சிக்கப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த நாட்டை மீட்டு வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டச்சி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கருத்துகளில், கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த நாட்டின் நிலையை மாற்றுவதற்காக தற்போதைய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதன் விளைவாக நாட்டின் பொருளாதாரம் மீட்சிப் பாதையில் பயணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாகவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். அந்தச் சம்பவத்தை அரசாங்கம் சாதாரண விடயமாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு உரிய விசாரணைகளும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சிறைச்சாலை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்தின் ஆட்சித் திறனை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கருத்துகள் பொருத்தமற்றவை எனவும் நிலாந்தி கொட்டச்சி கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக உண்மைகளை வெளிக்கொணரவும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், குறுகிய அரசியல் இலாபங்களை நோக்கமாகக் கொண்டு எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக பயன்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக