நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலகத் தலைவர்களுக்கு துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் வழங்கிய நினைவுப்பரிசு சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. வழக்கமான நினைவுப்பரிசுகளுக்கு பதிலாக, செயல்படும் பழமையான ரிவால்வர் கைத்துப்பாக்கி மற்றும் அதற்கான தோட்டாக்கள் அடங்கிய சிறப்பு பரிசுப் பெட்டிகள் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
துருக்கியின் பாதுகாப்புத் துறையின் தொழில்நுட்ப திறனையும் உள்நாட்டு ஆயுத உற்பத்தியையும் உலகிற்கு எடுத்துக்காட்டும் நோக்கில் இந்தப் பரிசுகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு தலைவருக்கும் அவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட, 1990-களில் துருக்கியின் MKE நிறுவனம் தயாரித்த அரிய "Gumusay .357 Magnum" ரிவால்வர் மரப்பெட்டியில் வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பெட்டியில் துருக்கி தேசியக் கொடி, நேட்டோ சின்னம் மற்றும் "எங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ரிவால்வர் வகை கைத்துப்பாக்கி" என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.
இந்த நினைவுப்பரிசு பல்வேறு நாடுகளின் தலைவர்களிடையே வித்தியாசமான சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளது. பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர், மாநாட்டிலிருந்து நாடு திரும்பிய பின்னரே தனது பயணப்பையில் உண்மையான ரிவால்வரும் தோட்டாக்களும் இருப்பதை அறிந்து, பின்னர் அவற்றை பிரஸ்ஸல்ஸ் விமான நிலைய காவல்துறையிடம் பாதுகாப்பாக ஒப்படைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலந்து ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட ரிவால்வர் தற்போது சுங்க அனுமதிக்காக வார்சா விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், பின்னர் நினைவுப்பொருளாக பாதுகாக்கப்படும் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. நெதர்லாந்து மற்றும் ஸ்வீடன் பிரதமர்களுக்குக் கிடைத்த ரிவால்வர்கள் அந்தந்த நாடுகளின் அங்காரா தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. நெதர்லாந்து தனது ரிவால்வரை செயலிழக்கச் செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில், ஸ்வீடன் இறக்குமதி அனுமதிக்காக காத்திருக்கிறது.
இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி தனது ரிவால்வரை அரசின் அதிகாரப்பூர்வ பரிசுப் பொருட்களுடன் பாதுகாப்பாக வைத்துள்ளார். ஐரோப்பிய ஆணைக்குழுத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் அதனை இராணுவ அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கிரேக்க பிரதமரும் தனது பரிசை ஏதென்ஸ் போர் அருங்காட்சியகத்திற்கு வழங்கத் திட்டமிட்டுள்ளார்.
கனடா பிரதமர் மார்க் கார்னி, தாம் வழங்கிய மேப்பிள் சிரப் பரிசுடன் ஒப்பிடும்போது இந்த நினைவுப்பரிசு மிகவும் வித்தியாசமானதாக இருப்பதாக நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். தனக்கு வழங்கப்பட்ட ரிவால்வர் ஏற்கனவே செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும், அது கனடாவின் தேசிய போர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
உலகளவில் ஆயுத உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முக்கிய இடத்தை வகிக்கும் துருக்கி, தனது பாதுகாப்புத் தொழில்துறையின் திறனை வெளிப்படுத்தும் வகையில் இந்த அபூர்வ நினைவுப்பரிசை வழங்கியிருப்பது சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக