முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், வழக்கில் ஆஜரான சாட்சிகள் பல்வேறு தகவல்களை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளனர்.
இந்த வழக்கில் சாட்சியமளித்த யசாரா அபேநாயக்க, வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள தெஹிவளை மிஹிந்து மாவத்தையில் அமைந்துள்ள வீட்டிற்கு பலமுறை சென்றுள்ளதாக தெரிவித்தார். மேலும், தானும் யோசித ராஜபக்சவும் திருமணம் செய்து கொண்டு அந்த வீட்டில் குடியேற திட்டமிட்டிருந்ததாகவும், அந்த வீடு யோசித ராஜபக்சவினால் நிர்மாணிக்கப்பட்டது என தமக்குத் தெரியும் என்றும் சாட்சியமளித்தார்.
வீடு நிர்மாணிக்கப்பட்ட காலப்பகுதியில் யோசித ராஜபக்ச கடற்படையில் பணியாற்றியதுடன், CSN தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிகளிலும் ஈடுபட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார். எதிர்த்தரப்பு சட்டத்தரணியின் குறுக்குவிசாரணையின்போது, குறித்த வீடு பல அறைகள் கொண்ட பெரிய மாளிகை எனவும் அவர் தெரிவித்தார்.
மற்றொரு சாட்சியான காணி உரிமையாளர் லூஷன் ரத்நாயக்க, தனது 31 பேர்ச் காணியை விற்பனை செய்வதற்காக நண்பரான வசந்த குமார ஜயசூரியவிடம் ஒப்படைத்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். பின்னர், 34.5 மில்லியன் ரூபா பெறுமதியில் விற்பனை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாகவும், பணம் தனது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பின்னரே ஆவணங்களில் கையெழுத்திட்டதாகவும் கூறினார். எனினும், அந்தப் பணத்தை யார் செலுத்தினர் என்பது தமக்குத் தெரியாது என்றும், உறுதிப்பத்திரத்தில் வாங்குபவராக டேசி பொரஸ்ட் என்ற பெயர் இடம்பெற்றிருந்ததாகவும் சாட்சியமளித்தார்.
மேலும், காணி விற்பனைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற பொருட்கள் விற்பனை நிகழ்வின்போது, யோசித ராஜபக்ச தனது காதலியுடன் அந்த வீட்டிற்கு வந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மூன்றாவது சாட்சியான வசந்த குமார ஜயசூரிய, யசாரா அபேநாயக்க தனது உறவினர் என்றும், அவர் மற்றும் யோசித ராஜபக்ச மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாகவும் கூறினார். காணி கொள்வனவு தொடர்பாக யோசித ராஜபக்ச தம்மிடம் கலந்துரையாடியதாகவும், அதனைத் தொடர்ந்து விற்பனை ஆவணங்கள் கையெழுத்திடப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அந்த சந்தர்ப்பத்தில் காணி கொள்வனவுக்கான பணம் பாதுகாப்பு அதிகாரிகளைப் போன்ற தோற்றமுடைய நபர்களால் பைகளில் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. யோசித ராஜபக்ச ஏற்கனவே கைது செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கின் மேலதிக விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக