நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக பல்வேறு முன்னணி சர்வதேச ஊடகங்கள் விரிவாக செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் இலங்கையின் சிறைச்சாலை அமைப்பில் நிலவி வரும் நெரிசல் மற்றும் பாதுகாப்பு சவால்களை சர்வதேச அரங்கில் மீண்டும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக அவை குறிப்பிட்டுள்ளன.
1914 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட நீர்கொழும்பு சிறைச்சாலையில் அதன் கொள்ளளவை விட அதிகமான கைதிகள் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும், போதைப்பொருள் கடத்தல் குழுக்களுடன் தொடர்புடைய இரண்டு கைதி குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலே வன்முறைக்கு காரணமாக அமைந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நிலைமையை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டபோதும், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் துப்பாக்கிக் காயங்கள் மற்றும் வெட்டுக் காயங்களுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிபிசி தனது செய்தியில், இரண்டு நாட்கள் நீடித்த இந்த வன்முறை சம்பவம் இலங்கையின் சிறைச்சாலை அமைப்பில் நீண்டகாலமாக நிலவி வரும் அதிக நெரிசல் மற்றும் நிர்வாக சவால்களை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், மோதலின் போது கைதிகள் தப்பிச் செல்ல முயன்றதுடன், பெண் கைதிகள் சிறைச்சாலை கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவங்களும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல் ஜசீரா தனது செய்தியில், சம்பவத்தின் மனிதாபிமான தாக்கத்தை முன்னிலைப்படுத்தியதுடன், காயமடைந்த கைதிகள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் எதிர்கொண்ட துயரமான சூழ்நிலைகளையும் எடுத்துரைத்துள்ளது. இதேவேளை, நியூயோர்க் டைம்ஸ் இந்த சம்பவத்தை பல தசாப்தங்களில் இலங்கையில் பதிவான மிகக் கடுமையான சிறைச்சாலை வன்முறைகளில் ஒன்றாக விவரித்துள்ளது.
பிரித்தானியாவின் கார்டியன், பாகிஸ்தானின் டான், இந்தியாவின் WION மற்றும் NDTV உள்ளிட்ட பல சர்வதேச ஊடகங்களும் இந்த சம்பவத்தின் தீவிரத்தையும் அதன் பின்னணியையும் விரிவாக செய்தியாக வெளியிட்டுள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக