நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களின் போது, விசேட அதிரடிப்படையின் தொப்பி அணிந்தும் பொலிஸ் சீருடை அணிந்தும் இருந்த மர்ம நபர் ஒருவர் சிறைச்சாலையின் பிரதான நுழைவாயிலை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (7) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பாக உரையாற்றிய அவர், சம்பவம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாக குறிப்பிட்டார்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார், அவர் எந்த நோக்கத்திற்காக இந்தச் செயலில் ஈடுபட்டார், அதற்கான பின்னணி என்ன என்பது குறித்து அரசாங்கம் உடனடியாக விளக்கம் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட பதற்ற நிலை, மோதலுக்கான உண்மையான காரணங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து தகவல்களும் பொதுமக்கள் அறியும் வகையில் வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முழுமையாகவும் வெளிப்படையாகவும் முன்னெடுக்கப்பட்டு, உண்மை நிலை விரைவில் நாட்டிற்கு அறிவிக்கப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன வலியுறுத்தினார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக