யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய நிர்வாகக் கட்டடத் தொகுதியின் இரண்டாம் கட்டப் பணிகளை நிறைவு செய்வதற்காக வரி நீங்கலாக ரூ.1,958.85 மில்லியன் திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, திட்டத்தின் அசல் ஒப்பந்த நிறுவனமான மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகத்திற்கு மீதமுள்ள கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டத்தில் கட்டடத்திற்கான நவீன குளிரூட்டும் (Air Conditioning) அமைப்பும் நிறுவப்படவுள்ளது.
இந்தக் கட்டடத் திட்டத்திற்கு 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, அதே ஆண்டு அக்டோபரில் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 2022 ஆம் ஆண்டளவில் திட்டத்தின் சுமார் 70 சதவீத பணிகள் நிறைவடைந்திருந்த போதிலும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
தற்போது திருத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் எஞ்சிய பணிகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தவுடன் புதிய கட்டடத் தொகுதியை அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்க யாழ்ப்பாண மாநகர சபை சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் நிறைவடைந்த பின்னர், யாழ்ப்பாண மாநகர சபையின் நிர்வாக சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்ட நவீன கட்டடத்தில் செயல்படுவதுடன், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரமும் செயல்திறனும் மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக