யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி நடைபெற்று வரும் வருடாந்த பாதயாத்திரையில் பக்தர்களுடன் தானாக இணைந்து தொடர்ந்து பயணித்து வரும் “சுப்பிரமணியம்” என்ற நாய், பக்தர்களிடையே பெரும் கவனத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பகுதியை கடந்து சென்றுகொண்டிருந்த பாதயாத்திரைக் குழுவுடன், உரிமையாளர் எவரும் இல்லாத நிலையில் இந்த நாய் தானாகவே இணைந்ததாக பாதயாத்திரைக் குழுத் தலைவர் ஜெயவேல் சுவாமி தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், கடந்த 33 நாட்களாக பக்தர்களுடன் இணைந்து பயணித்து வரும் இந்த நாய், யாத்திரையில் பங்கேற்றவர்களின் அன்பையும் மரியாதையையும் பெற்றுள்ளது. இதனை தெய்வீக அருளின் அடையாளமாக கருதிய பக்தர்கள், நாயின் கழுத்தில் துணி கட்டி, நெற்றியில் விபூதி மற்றும் குங்குமம் இட்டு “சுப்பிரமணியம்” என அழைத்து வருகின்றனர்.
இந்த நாயைக் காண்பதற்காக கதிர்காமம் நோக்கிய பாதையின் இருபுறங்களிலும் மக்கள் திரளாக கூடிவருவதுடன், சமூக ஊடகங்களிலும் இதன் பயணம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
திருகோணமலை பகுதியில் பயணித்தபோது நாய் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இதையடுத்து அதற்கு கால்நடை மருத்துவ சிகிச்சை வழங்க பக்தர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இயல்பாக மாமிச உணவு உட்கொள்ளும் விலங்காக இருந்தபோதிலும், கடந்த பல நாட்களாக பக்தர்கள் வழங்கும் பால், பாண், பிஸ்கட் மற்றும் சைவ உணவுகளை மட்டுமே உட்கொண்டு வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நாயின் விடாமுயற்சியும், பக்தர்களுடன் இணைந்து தொடர்ந்து பயணிக்கும் தன்மையும், கடினமான பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ள பக்தர்களுக்கு மன உற்சாகத்தையும் ஆன்மீக உணர்வையும் வழங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக