தனிநபர்கள் மேற்கொள்ளும் குடியிருப்பு சொத்து மற்றும் வாகன விற்பனைகளுக்கான வரி விதிப்பு தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, ஒருவர் தனது குடியிருப்பு சொத்தை விற்பனை செய்யும் போது, குறித்த சொத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் அவரது சட்டபூர்வ உடைமையில் இருந்திருக்க வேண்டும். மேலும், அந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகளுக்கும் அதிக காலம் அவர் அந்த வீட்டில் வசித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், அந்த சொத்து விற்பனையிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்கு வரி விலக்கு வழங்கப்படும் என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், குடும்ப உறுப்பினர்களுக்கிடையில் சொத்து பரிமாற்றம் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பங்களில் எந்தவித வரியும் அறவிடப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குடும்ப உறுப்பினர்களைத் தவிர மூன்றாம் தரப்பினருக்கு சொத்துக்கள் விற்பனை செய்யப்படும் போது மட்டுமே தொடர்புடைய வரி விதிமுறைகள் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தனிநபர் வாகன விற்பனை தொடர்பாக முன்னர் நடைமுறையில் இருந்த வரிமுறை 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வாகனத்தின் வயது, வகை அல்லது நிலைமை எதுவாக இருந்தாலும், தனிநபர் ஒருவர் தனது வாகனத்தை விற்பனை செய்வதன் மூலம் பெறும் இலாபம் முழுமையாக வரி விலக்கிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விளக்கியுள்ளது.
இந்த அறிவிப்பு, சொத்து மற்றும் வாகன விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டுள்ள பொதுமக்களுக்கு முக்கிய வழிகாட்டலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக