வடக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் பாரிய காணி மோசடிகளைத் தடுக்கும் நோக்கில் விரைவில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனின் விசேட அழைப்பின் பேரில், ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
பதிவாளர் திணைக்களத்தின் 160 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் பதிவாளர் நாயகமாக பதவியேற்றுள்ள சசிதேவி ஜலதீபனுக்கு வாழ்த்து தெரிவித்த ஆளுநர், வடக்கில் இடம்பெறும் காணி மோசடிகள் குறித்து தனது கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக, வெளிப்படுத்தல் உறுதி ஆவணங்களை பயன்படுத்தி இடம்பெறும் மோசடிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்த நடைமுறையை முற்றாக தடை செய்வதே நோக்கமல்ல என்றும், அதன் பெயரில் இடம்பெறும் சட்டவிரோத காணி அபகரிப்புகளைத் தடுப்பதே முக்கிய குறிக்கோள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலி வடக்கு பகுதியில் இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளும், வெளிநாடுகளில் வாழும் மக்களுக்குச் சொந்தமான காணிகளும் போலி உறுதிப்பத்திரங்கள் மூலம் அபகரிக்கப்பட்டுள்ளதாக கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், கடந்த காலங்களில் காணி மோசடிகளுடன் தொடர்புடைய சில சட்டத்தரணிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் காணப்பட்ட கட்டுப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவாளர் திணைக்களத்தின் சில அதிகாரிகள் கூட போலி ஆவணங்கள் தயாரிக்கும் நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததுடன், காணிகளின் மூல ஆவணங்கள் சில இடங்களில் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், வடக்கு மாகாணத்தில் காணி உரிமையாளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், எதிர்காலத்தில் இத்தகைய மோசடிகளை முற்றிலுமாக கட்டுப்படுத்தவும் வலுவான மற்றும் வெளிப்படையான பொறிமுறையொன்றை விரைவாக உருவாக்குவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக