கொழும்பில் உள்ள முன்னணி ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்பிய தொழிலதிபர் ஒருவரின் தங்கக் கைக்காப்பை திருடியதாகக் கூறப்படும் வாடகை கார் சாரதி ஒருவரை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசாரணைகளின் படி, வத்தளை ஹேகித்த பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கடந்த 17ஆம் திகதி தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வாடகை வாகனத்தில் கொழும்பில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்தார். பின்னர் தனது குடும்பத்தினரை வேறு வாகனத்தில் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, அவர் மட்டும் திருமண வரவேற்பு நிகழ்வில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மறுநாள் அதிகாலை சுமார் 1.30 மணியளவில் நிகழ்வு முடிந்ததைத் தொடர்ந்து, தொழிலதிபர் தனியாக வாடகை காரில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாகவும், அந்த சூழ்நிலையை பயன்படுத்தி சாரதி தொழிலதிபர் அணிந்திருந்த சுமார் 102 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கக் கைக்காப்பை கழற்றி எடுத்துச் சென்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வீட்டிற்கு திரும்பிய பின்னர், மாலை நேரத்தில் தனது கைக்காப்பு காணாமல் போயிருப்பதை உணர்ந்த தொழிலதிபர் உடனடியாக வத்தளை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகளை ஆரம்பித்த குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள், வாடகை பயணம் மேற்கொள்ள விரும்புவதாக கூறி சந்தேகநபரை தந்திரமாக வத்தளை பகுதிக்கு வரவழைத்து கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், திருடப்பட்ட தங்கக் கைக்காப்பு நீர்கொழும்பு பகுதியில் உள்ள அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் 20 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவரை வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக