நாட்டில் இயங்கும் தனியார் பேருந்துகளில் சுமார் 25 சதவீதம் தற்போது மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயக்கப்படுவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தொடர்ச்சியாக அரசாங்கத்திடம் போதுமான டீசல் ஒதுக்கீட்டை கோரி வந்த போதிலும், சில பேருந்து உரிமையாளர்கள் மாற்று வழியாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக கூறினார்.
பயணிகள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் பேருந்துகளை மண்ணெண்ணெயில் இயக்குவது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதுடன், எரிபொருள் பயன்பாட்டின் தரநிலைகளிலிருந்தும் விலகிய செயற்பாடாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட டீசல் விலை உயர்வின் தாக்கத்தால் தினசரி இயக்கப்படும் தனியார் பேருந்து சேவைகளின் எண்ணிக்கை சுமார் 25 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பேருந்துக் கட்டணங்கள் ஆண்டுதோறும் பொருளாதாரக் குறிகாட்டிகளின் அடிப்படையில் ஜூலை மாதத்தில் மறுஆய்வு செய்யப்படுவது வழக்கமாக இருந்தாலும், தற்போதைய எரிபொருள் விலை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை கருத்தில் கொண்டு இடைக்கால கட்டண உயர்வொன்றை அமல்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் செலவுகள் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், தனியார் பேருந்து சேவைகளை தடையின்றி முன்னெடுத்து செல்ல மாற்று நடவடிக்கைகள் அவசியமாக உள்ளதாகவும், அதற்கான தீர்வுகளை அரசாங்கம் விரைவாக வழங்க வேண்டும் என்றும் கெமுனு விஜேரத்ன வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக