மேற்கத்திய மற்றும் ஆயுர்வேத மருத்துவராக தன்னை அறிமுகப்படுத்தி, வெளிநாடுகளில் இருந்து விசேட மருந்துகளை இறக்குமதி செய்து நோயாளிகளுக்கு வழங்குவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் 53 வயதுடைய பெண் ஒருவர் ஹொரண பிராந்திய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிபாவ பகுதியைச் சேர்ந்த இந்தப் பெண், அண்மைக்காலமாக ஹொரண பகுதியில் வசித்து வந்ததாகவும், பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறும் நோக்கில் சொகுசு வாகனங்களை வாடகைக்கு எடுத்து அவற்றில் மருத்துவ அடையாளங்களை காட்சிப்படுத்தி பல்வேறு பகுதிகளில் இலவச மருத்துவ முகாம்களை நடத்தியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், வெளிநாடுகளில் இருந்து அரிய மற்றும் விசேட மருந்துகளை இறக்குமதி செய்து நோயாளிகளுக்கு வழங்குவதாக கூறி பலரை நம்பவைத்துள்ளார். அதேவேளை, துறைமுகத்தில் மருந்து கொள்கலன்கள் வந்துள்ளதாகவும், அவற்றை விடுவிக்க அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும் கூறி பொதுமக்களிடமிருந்து பெருமளவு நிதியை பெற்றுள்ளார்.
எனினும், அவர் வழங்கியதாகக் கூறப்படும் மருந்துகள் இலங்கையில் பயன்பாட்டிற்கு அங்கீகாரம் பெறாத தரமற்ற மருந்துகள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் சுமார் 6 கோடி ரூபாய் வரை மோசடி இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்த மோசடிக்கு கம்பஹா, மதுராவல, மில்லனிய, பண்டாரகம, ஹொரண, இங்கிரிய உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டுமன்றி, சில விகாரைகளின் தலைமைத் தேரர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேகநபரின் மருத்துவத் தகைமைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் எந்த மருத்துவ சபையிலும் அல்லது ஆயுர்வேத மருத்துவப் பதிவிலும் இடம்பெறாதவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அவரது பெயரில் இரண்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
மோசடி செய்யப்பட்ட பணம் வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளதா, அதில் வேறு நபர்கள் தொடர்புடையவர்களா, சட்டவிரோத நிதி வலையமைப்புகள் இதில் உள்ளனவா என்பது தொடர்பிலும் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் போலி மருத்துவர்கள் மற்றும் அங்கீகாரம் பெறாத மருந்துகள் தொடர்பான விழிப்புணர்வின் அவசியத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளதுடன், மருத்துவ சேவைகளை பெறும் முன் உரிய தகுதிகள் மற்றும் பதிவுகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக