பொதுமக்கள் பொலிஸ் திணைக்களத்தின் பல்வேறு சேவைகளை எளிதாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய மொபைல் செயலி மற்றும் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் கீழ், iOS மற்றும் Android இயங்குதளங்களுக்கு ஏற்ற மொபைல் செயலி ஒன்றும், கைபேசிகள் மூலம் எளிதில் அணுகக்கூடிய புதிய பொலிஸ் இணையதளமும் உருவாக்கப்படுகின்றன.
இந்த செயலியின் மூலம் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிடும் செய்திகள், அறிவிப்புகள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பொதுமக்கள் நேரடியாகப் பார்வையிட முடியும். மேலும், அவசரத் தகவல்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் உடனுக்குடன் அறிவிப்பு வசதி மூலம் பயனர்களுக்கு அனுப்பப்படவுள்ளன.
அத்துடன், பொலிஸ் அனுமதி அறிக்கைகளுக்கான விண்ணப்பங்கள், அவசரகால தொலைபேசி எண்கள், அவசரகால இருப்பிட எச்சரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் ஒரே தளத்தில் பெற்றுக்கொள்ளும் வசதி இந்த செயலியில் வழங்கப்பட உள்ளது.
மென்பொருள் மேம்பாட்டு தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்படும் இந்த செயலி மற்றும் இணையதளத்திற்கான தொழில்நுட்ப ஆதரவு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை பொலிஸ் திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மேற்கொண்டு வருகிறது. அதேவேளை, செயலியின் உள்ளடக்க வடிவமைப்பு மற்றும் தகவல் வெளியீட்டு பணிகளை பொலிஸ் ஊடகப் பிரிவு முன்னெடுத்து வருகிறது.
பொதுமக்கள் பொலிஸ் சேவைகளைப் பெறுவதற்காக செலவிடும் நேரத்தையும் முயற்சியையும் குறைக்கும் நோக்கில் உருவாக்கப்படும் இந்த மொபைல் செயலி, எதிர்காலத்தில் நாட்டின் பெரும்பாலான நவீன கைபேசி பயனர்களால் பயன்படுத்தப்படும் முக்கிய சேவைத்தளமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக