தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு மாணவியை ஏமாற்றி அழைத்துச் சென்று குடும்பம் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 45 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி கர்ப்பமான நிலையில் மீட்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
உத்திரமேரூர் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கோயில் திருவிழாவிற்கு சென்ற பின்னர் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், பெற்றோர் காவல்துறையில் முறைப்பாடு செய்தனர். இதையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மாணவியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்த தொலைபேசி இலக்கத்தை ஆய்வு செய்தபோது, அது 45 வயதுடைய நபருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், குறித்த நபரும் மாணவியும் ஒரு விடுதியில் தங்கியிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். அப்போது மாணவி திருமணமான பெண்ணைப் போன்று தாலி அணிந்திருந்ததாகவும், இருவரும் கணவன்–மனைவி போன்று வாழ்ந்து வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் விசாரணைகளில், குறித்த நபருக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகளும் நான்கு பிள்ளைகளும் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கல்லூரியில் கல்வி பயிலும் வயதுடைய மகன் ஒருவரும் அவருக்கு இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தனது திருமண வாழ்க்கையை மறைத்து, மாணவியிடம் காதல் மற்றும் திருமண வாக்குறுதிகளை வழங்கி நெருக்கமான உறவை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த உறவின் காரணமாக மாணவி கர்ப்பமடைந்ததாகவும், பின்னர் திருவிழா நேரத்தில் அவரை அழைத்துச் சென்று தாலி கட்டியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுமி தொடர்பான குற்றச்செயல்களில் பயன்படுத்தப்படும் POCSO (Protection of Children from Sexual Offences) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமிகளை இலக்கு வைத்து ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வழக்கு பெற்றோர்கள் மற்றும் சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தமிழ்நாடு காவல்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக