இறுதிப்போர் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் தங்க ஆபரணங்கள் மற்றும் பெறுமதிமிக்க பொருட்கள் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்குப் பகுதியில் கைப்பற்றப்பட்ட கொள்கலன்களை பரிசோதித்தபோது பெருமளவிலான தங்கப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அந்த தகவல் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அந்தப் பொருட்கள் உலங்குவானூர்திகள் மூலம் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், இந்த நடவடிக்கைகள் தொடர்பில் அன்றைய இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு முழுமையான தகவல்கள் வழங்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், தங்கப் பொருட்களை ஏற்றிச் சென்ற இறுதி விமானப் பயணத்தின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிலர் பின்னர் காணாமல் போயுள்ளதாகவும், அந்த விமானத்தை இயக்கிய விமானி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. எனினும், இக்குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தங்க ஆபரணங்கள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழு அண்மையில் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் தங்க ஆபரணங்கள் தற்போது இராணுவப் புலனாய்வுப் பிரிவின் விசேட பாதுகாப்புப் பெட்டகங்களில் பாதுகாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக