நீர்கொழும்பு பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் மறைமுகமாக நடத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றை வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படை அதிகாரிகள் திடீர் முற்றுகையிட்டு மூன்று பெண்களை கைது செய்துள்ளனர்.
கொப்பரா சந்தி பகுதியில் அமைந்திருந்த குறித்த இடம் தொடர்பில் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
சோதனையின் போது, விடுதியை நிர்வகித்து வந்த பெண் ஒருவரும், அங்கு தங்கியிருந்த மேலும் இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 31, 35 மற்றும் 40 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுவதுடன், வாரியப்பொல, பூஸ்ஸ மற்றும் மத்துகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட இந்த நடவடிக்கை, சட்டவிரோத வர்த்தகங்கள் மற்றும் சமூக ஒழுக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, குறித்த இடம் எவ்வளவு காலமாக இயங்கி வந்தது, அதனுடன் தொடர்புடைய மேலும் நபர்கள் உள்ளனரா, பின்னணியில் அமைந்துள்ள வலையமைப்பு ஏதேனும் உள்ளதா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக