சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடும் பழக்கத்தை பயன்படுத்தி இலங்கை யுவதி ஒருவர் இலக்கு வைத்து இடம்பெற்றதாகக் கூறப்படும் ஆன்லைன் காதல் மோசடி சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. முகநூல் வழியாக சீனாவைச் சேர்ந்ததாக தன்னை அறிமுகப்படுத்திய இளைஞன் ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பு, பின்னர் காதலாக மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த இளைஞன் விரைவில் இலங்கைக்கு வந்து திருமணம் செய்ய இருப்பதாகவும், அதற்கு முன்பாக சுமார் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான பரிசுப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறி நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார். பரிசுப் பொருட்கள் இலங்கையில் சுங்கத்தில் சிக்கியுள்ளதாகவும், அவற்றை விடுவிக்க 5 இலட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அந்த தகவல்களை உண்மையாக நம்பிய யுவதியும் அவரது குடும்பத்தினரும் தங்களிடம் இருந்த பணத்தையும், நகைகளை அடகு வைத்தும் சுமார் 5 இலட்சம் ரூபாய் பணத்தை குறித்த வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளனர். எனினும் பணம் அனுப்பப்பட்ட சில நேரத்திலேயே அந்த முகநூல் கணக்கு முடக்கப்பட்டதுடன், தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் தாம் மோசடிக்குள்ளாகியுள்ளதை உணர்ந்த குடும்பம் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது போன்ற சமூக வலைதள காதல் மற்றும் பரிசு மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக