களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கணவன் மற்றும் மனைவி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏகல்ல ஓயா பகுதியில் அமைந்துள்ள இருமாடி வீடொன்றின் மேல் மாடியில் தங்கியிருந்த தம்பதியினர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக புளத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தம்பதியினர் அந்த வீட்டில் வாடகை அடிப்படையில் வசித்து வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் விஜிதசிறி தசநாயக்க என்ற 62 வயதுடைய ஆணும், அவரது இரண்டாவது மனைவியாகக் கூறப்படும் புஷ்பா ஷிரோமணி என்ற 55 வயதுடைய பெண்ணும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில், உயிரிழந்த பெண்ணின் உடலில் இரத்தக் கறைகள் காணப்பட்டதாகவும், அவரது சடலம் துணியொன்றால் மூடப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனால் மரணத்தின் தன்மை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
மேலும், குறித்த வீடு கடந்த சில நாட்களாக பூட்டப்பட்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாகவும், இதன் அடிப்படையில் இந்த மரணங்கள் சில நாட்களுக்கு முன்னரே நிகழ்ந்திருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இரு சடலங்களும் மேலதிக பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிவதற்கான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புளத்சிங்கள பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக