உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் சுரேஷ் சலே, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாகவும், அதனால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளின் காரணமாகவும் கடந்த 07ஆம் திகதி அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், பின்னர் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரும் சுரேஷ் சலே தொடர்ச்சியாக உணவு மற்றும் மருந்துகளை உட்கொள்ள மறுத்து வந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு சேலைன் வழங்கப்பட்ட நிலையிலும் மருத்துவர்களின் பரிந்துரைகளுக்கு இணங்க மருந்துகளைப் பயன்படுத்தாத சூழ்நிலை நீடித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடமையில் இருந்த பெண் தாதி ஒருவர், நோயாளியின் உடல்நிலை மேலும் மோசமடையக்கூடும் என எச்சரித்து, மருந்துகளை உட்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என்றும், சிகிச்சையை மறுப்பது உயிருக்கு ஆபத்தாக அமையக்கூடும் என்றும் அவர் கடுமையாக சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து சுரேஷ் சலே மருந்துகளை உட்கொள்ளத் தொடங்கியுள்ளதாகவும், எனினும் அவர் தொடர்ந்து உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை தொடர்பான நடவடிக்கைகள் மருத்துவ கண்காணிப்பின் கீழ் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக