அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாய் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து சென்றால், எதிர்வரும் நாட்களில் எரிபொருள், மின்சாரம், நீர் கட்டணங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள், சேவைகளின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நிதி அமைப்பில் காணப்படும் அதிகப்படியான ரூபாய் புழக்கம், மத்திய வங்கி சந்தையிலிருந்து டொலர்களைக் கொள்வனவு செய்வதால் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு, உலகளாவிய அரசியல் பதற்றங்களால் சுற்றுலாத் துறை மற்றும் ஏற்றுமதித் துறையில் ஏற்பட்டுள்ள சரிவு போன்றவையே இந்த ரூபாய் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இலங்கை தனது எரிபொருளை டொலரைப் பயன்படுத்தியே இறக்குமதி செய்வதால், ரூபாய் வீழ்ச்சியடையும் போது பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நேரடியாக உயரும் என்றும், இந்த விலை உயர்வு பணவீக்கத்தை ஏற்படுத்தி இறுதியில் மின்சாரம், நீர் மற்றும் அனைத்து பொருட்களின் விலைகளையும் உயர்த்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் திகதிக்குப் பின்னர் அமெரிக்க டொலரின் அதிகூடிய விற்பனை விலை நேற்று பதிவாகியுள்ளதுடன், இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி டொலர் ஒன்றின் விற்பனை விலை 329.92 ரூபாயிலிருந்து 331.15 ரூபாயாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள்
டொலருக்கு நிகராக வீழும் இலங்கை ரூபாய்!
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக