முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் முகமாக நடத்தப்படும் விசேட ஊர்தி பவனி நேற்று (15.05.2026) காலை மன்னார் மாவட்டத்தை வந்தடைந்துள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஊர்தி பவனியானது ஓமந்தை ஊடாக வவுனியாவைச் சென்றடைந்து, தனது நான்காவது நாளான நேற்று வெள்ளிக்கிழமை மன்னாரை வந்தடைந்தது. இதன்போது மன்னார் பேருந்து தரிப்பிடம் மற்றும் மாவட்ட பொது வைத்தியசாலை வீதி ஆகிய இரு முக்கிய இடங்களில் இந்த நினைவு ஊர்தி நிறுத்தப்பட்டது. அங்கு ஒன்று திரண்ட ஏராளமான பொதுமக்களும் உணர்வாளர்களும், போரில் மடிந்த தங்களின் உறவுகளை நினைத்து உருகி, மலர் தூவி நெஞ்சுருக அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மன்னார் நகர வீதிகளின் ஊடாக பயணித்த இந்த ஊர்தி பவனியை அப்பகுதி மக்கள் மிகவும் உணர்வெழுச்சியுடன் வரவேற்றுத் தங்களின் மரியாதையைச் செலுத்தினர்.
செய்திகள்
மன்னாரை வந்தடைந்தது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி பவனி
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக