சிறுமி ஒருவரைத் தகாத நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அநுராதபுரம் பிரதான விகாரையின் தலைமை விகாராதிபதி பல்லேகம ஹேமரத்தன பிக்குவிற்கு எதிரான வழக்கு விசாரணை, நேற்று (15.05.2026) அநுராதபுரம் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது சந்தேகநபரான பௌத்த பிக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நிலையில், அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி ரஞ்சித் ராஜகருணா உட்பட 20 சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் சார்பில் சட்டத்தரணி பிரதீப் திஸாநாயக்க முன்னிலையான போதிலும், துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமியின் உரிமைகளுக்காகப் பேசுவதற்கு வெளித்தரப்பு வழக்கறிஞர்கள் எவரும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் நீதியை நிலைநாட்டும் பிரிவின் பிரதானி சஞ்ஜீவனி அபேகோனின் தீவிர முயற்சியாலேயே இந்தத் தேரருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன், இச்சம்பவம் குறித்து அவர் தனது முகநூலில், "சட்டத்திற்கு மேல் மதம் - நீதியை விட பணம் முன்னிலையில்" எனப் பதிவிட்டுள்ளமை இந்த வழக்கில் நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள கடுமையான அழுத்தத்தைக் காட்டுகிறது.
இதேவேளை, தனது இளம் வயது மகளைத் தெரிந்தே தேரரிடம் தகாத நடத்தைக்காக ஒப்படைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சிறுமியின் தாயாரை, எந்தவொரு பிணை நிபந்தனையின் கீழும் விடுவிக்க அநுராதபுரம் நீதிமன்ற நீதிபதி சியபத் சசிந்து விக்ரமரத்ன மறுத்து, அவரை மே 22ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். மேலும், கோட்டை நீதிமன்ற உத்தரவின்படி கொழும்பு தேசிய மருத்துவமனையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முதல் சந்தேகநபரான பல்லேகம ஹேமரத்ன தேரரையும், எதிர்வரும் மே 22ஆம் திகதியன்று அநுராதபுரம் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு நீதிபதி கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக