சீகிரியா பகுதியில் பேருந்து பயணத்தின் போது அறிமுகமான நபர் ஒருவர், காதலிப்பதாக நம்ப வைத்து இளம் பெண்ணையும் அவரது தாயாரையும் திட்டமிட்டு ஏமாற்றிய அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.
தன்னை நல்ல குணமுள்ள நபராக காட்டிக்கொண்ட சந்தேகநபர், முதலில் யுவதியின் நம்பிக்கையைப் பெற்று அவரது தொலைபேசி இலக்கத்தை பெற்றுள்ளார். பின்னர் தனது தாய் மற்றும் சகோதரி என கூறி இரு பெண்களை தொலைபேசியில் பேச வைத்து போலியான குடும்ப சூழலை உருவாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
யுவதியின் தாயார் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த மோசடி கும்பல், அதனை பயன்படுத்தி “கெகிராவ பகுதியில் சக்திவாய்ந்த சாமியார் ஒருவர் உள்ளார்; அவர் மந்திரித்து கொடுக்கும் இளநீரை அருந்தினால் நோய் குணமாகும்” என நம்ப வைத்துள்ளனர்.
இதன்பேரில் தாய் மற்றும் மகளை அழைத்துச் சென்ற கும்பல், இளநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, 17 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக