தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி அனுப்பிய செய்தியில், இலங்கை மற்றும் தமிழகத்திற்கு இடையே நிலவும் ஆழமான வரலாற்று, கலாசார மற்றும் வணிக ரீதியிலான பிணைப்புகளைச் சுட்டிக்காட்டியதுடன், இரு பிராந்தியங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக இணைந்து செயற்பட விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். தமிழக மக்களுக்கும் புதிய முதல்வர் விஜய்க்கும் அவர் தனது நல்வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
ஜனாதிபதியின் இந்த வாழ்த்துக்குப் பதிலளிக்கும் வகையில், முதல்வர் விஜய் தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், இலங்கை ஜனாதிபதியின் வாழ்த்துக்களால் தான் மிகுந்த கௌரவம் அடைவதாகவும், இந்த அன்பான செயலுக்குத் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி அரசியல் மாற்றம், அண்டை நாடான இலங்கையுடனான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக