இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக, நாடு முழுவதும் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை மேலும் தீவிரமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 200 மில்லி மீற்றருக்கும் அதிகமான மிகக் கடுமையான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, குருநாகல் மாவட்டங்களில் 100 மில்லி மீற்றர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும். இடி மின்னலுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறும், தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அபாயம் குறித்து அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக