ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இலங்கையில் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் தூக்கில் தொங்கி உயிரிழந்ததாக ஆரம்பத்தில் கூறப்பட்டாலும், அவரது உடல் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் தரையில் மீட்கப்பட்டமை இது திட்டமிட்ட கொலையோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. குறிப்பாக, உயிரிழப்பதற்கு சற்று முன்னர் ஊழியர் ஒருவரால் அவருக்கு வழங்கப்பட்ட 'பட்டி' (Strap) குறித்தும் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜபக்ச ஆட்சிக்காலத்தின் பாரிய நிதி மோசடிகளில் முக்கிய சாட்சியாளராகக் கருதப்பட்ட கபிலவின் மரணம், ராஜபக்ச குடும்பத்தினருக்குச் சாதகமாக அமைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
முன்னதாக, இந்த மோசடி தொடர்பாக விசாரணைக்கு வர மறுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கபிலவின் மரணத்திற்குப் பிறகு "விசாரணைக்கு ஒத்துழைப்பதாக" அறிவித்திருப்பது பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பிரதான சாட்சி இல்லாத நிலையில் விசாரணையை எதிர்கொள்வது எளிது என்பதே இதற்குப் பின்னால் உள்ள ராஜதந்திரம் எனப் பேசப்படுகிறது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம், கடந்த கால ஊழல்களை அம்பலப்படுத்துவதில் உறுதியாக உள்ள நிலையில், இந்த மர்ம மரணத்தின் உண்மை பின்னணி வெளிவரும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக