தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், நீண்டகால அரசியல் பகைமைகளை மறந்து எதிர்க்கட்சித் தலைவர்களையும், மூத்த தலைவர்களையும் நேரில் சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்று சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்ற கையோடு, முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து வைகோ, அன்புமணி ராமதாஸ் மற்றும் சீமான் ஆகியோரின் இல்லங்களுக்கும் நேரில் சென்று மரியாதை நிமித்தமாக உரையாடினார். குறிப்பாக வைகோவின் இல்லத்தில் பணியாற்றும் பெண்களிடம் விஜய் காட்டிய எளிமையும், அவர்கள் திருஷ்டி கழித்தபோது விஜய்யும் அதைத் திருப்பிச் செய்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
"அன்று அறிஞர் அண்ணா தலைவர்களுக்குக் கொடுத்த மரியாதையை, இன்று தம்பி விஜய் கொடுக்கிறார்" என வைகோ நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார். 1967-ல் அண்ணா முதலமைச்சராகப் பதவியேற்ற போது காமராஜர் உள்ளிட்டோரைச் சந்தித்த பிறகு, சுமார் 59 ஆண்டுகளாக இத்தகைய மரபு தமிழக அரசியலில் பின்பற்றப்படவில்லை. தற்போது அந்த ஆரோக்கியமான அரசியல் கலாச்சாரத்தை விஜய் மீண்டும் மீட்டெடுத்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது. முதலமைச்சரின் இந்தச் செயல் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நாகரிக அரசியலை முன்னெடுக்கும் விஜய்யின் இந்த அணுகுமுறை சமூக வலைதளங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக